Thursday, March 02, 2006

இந்தியாவின் வல்லாதிக்க கனவுகளும் புஸ்ஸின் வருகையும் -2

அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத விஞ்ஞானம் மற்றும் கச்சாப் பொருட்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் அணு ஆற்றலின் மூலம் பொது தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.

இதற்காக இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா விரும்பிப் பெற்றுக் கொண்டது இந்தியாவின் அணு ஆயுத உலைகளை சர்வதேசத்தின் பரிசோதனைகளுக்காகத் திறந்துவிட்டிருப்பது. 30 வருடம் கட்டிக்காத்து வந்த வீராப்பு கைவிடப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் தனது அணு ஆயுத செயல் திட்டங்களில் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது என்ற பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதனையே எதிர்பார்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இக்காலங்களில் இந்தியா அதிக அளவில் விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கின்றது என்று கிலாகித்துப் பேசும் வண்ணம் அமெரிக்கர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.

IAEA - சர்வதேச அணு சக்திக் கண்காணிப்பு முகவர் அமைப்பில் இந்தியா , ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளைப் போன்று கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல அணு ஆயுத அறிவை வேறு நாடுகளிற்கு விற்பனை செய்வதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரம் அமெரிக்கர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக்காயாகவே பயன் படுத்த முனைகின்றார்கள்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் சேதத்தை விளைவிக்கும் நோக்கிலேயே இந்தியாவை உபயோகப்படுத்த அவர்கள் முன் வந்திருக்கின்றார்கள்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பாரிய அணு ஆயுத வல்லமைக்கும் பொருளாதார எழுச்சிக்கும் எதிரான அமெரிக்காவின் சொற்படி கேட்கும் "unique roll " பாத்திரத்தை இந்தியா வகிக்கும் வரை அவர்கள் அடைந்த வெற்றி "land mark "என்றும் " historic " என்றும் அமெரிக்கர்கள் சந்தோஷப்படுவது போல மிகவும் சரியானதே.

மெளனம் கலைக்கிறார் வை.கோ -நன்றி குமுதம்

தமிழ்த் தேசியத்தின் தலைவர் வை. கோ தனது மெளனம் கலைத்து 'குமுதம்' வார இதழில் தன் உள்ளம் திறந்து உரையாடி இருக்கின்றார்.

அதே நேரம் வை.கோ தனது வலிமையையும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அவர் இருப்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலேயே இருப்பதையும் அவர் வார்த்தைகளில் காணக் கூடியதாக இருக்கின்றது.

தி.மு.க வின் உடனான கூட்டினை உறுதிப் படுத்தியிருக்கின்றார். கருணாநிதியின் பின்னால் பிளவு படக் கூடிய தி.மு.க வின் கழகக் கண்மணிகளிற்கு தலைமையேற்கக் கூடிய சந்தர்ப்பத்தை இதன் மூலம் அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதையே என்னால் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது.

அதே வாரப்பத்திரிகையில் சேரன் தெரிவித்திருக்கும் கருத்தினையும் நாம் பார்க்கலாம்.
" வை.கோ ஊழல் இன்னும் அண்டாத ஆத்மா. அவர்கிட்டே மக்களை ஏமாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை. அவரோட மேன்மை புரியாமல் அவர் ஏதோ ஒரு இடத்தில் போய் ஒட்டிக்கிறார். ஏன் ஒட்டுறீங்க தனியாக நடை போடுங்கன்னு சொன்னேன். தப்பா?"

என்று கேட்டிருக்கின்றார். இது நடிகர் இயக்குனர் சேரன் என்பதற்கு அப்பால் மாறி வரும் தமிழக மக்களுடைய கருத்து என்று தான் சொல்ல முடியும்.

தமிழக அரசியலிலும் வாழ்வியலிலும் மாற்றம் தேவை என்பதை அனைவரும் புரிந்திருக்கின்றார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டவேண்டிய நேரம் இது. படித்தவர்கள் இளைஞர்கள் களத்தில் இறங்கிப் போராடும் நேரம் இது.

இதே இதழில் பிறிதொரு இடத்தில் வை. கோ பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு ஸ்டாலின்,

" அவரிடத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அவருடைய போராட்டக் குணம்" என்று கூறியிருக்கின்றார்.

போராட்டக் குணமுடைய கறைபடாத தமிழ் தேசியம் பற்றிய தமிழர் பற்றிய அக்கறையுள்ள தலைவர் இருக்கின்றார். அவருடன் சேர்ந்து போராட நாம் தயாரா?

பதில் அளிக்க நல்ல சந்தர்ப்பம் தேர்தலாக எதிரே இருக்கின்றது.

இந்திய வல்லாதிக்கக் கனவுகளும் புஸ்ஸின் வருகையும்

சோவியத்தின் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின்னால் உலக நாடுகள் இரண்டு கோஸ்டிகளாகப் பிரியும் சாத்தியங்கள் தோன்றினாலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னான காலகட்டத்திலேயே கிட்லரின் ஜெர்மனியின் வீழ்ச்சியுடன் இப்பிளவு கொள்கை மற்றும் நாடுகள் ரீதியாக வலுப்பெற்றிருந்தது.

சோவியத் சார்பு சோஷலிச நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு முதலாளித்துவ நாடுகள் என்ற சார்பு நிலையில் உலகம் இரண்டாகப் பிரிந்து கொண்டது. இரண்டு பக்கமும் பிரிய முடியா வளர்முக நாடுகள் கலப்புப் பொருளாதாரம் என்னும் இடைநிலையை எடுத்து அணிசேராநாடுகள் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தன. சோஷலிச சார்பு நாடுகளுக்கும் முதலாளித்துவ சார்பு நாடுகளுக்கும் இடையிலான பிளவும் போட்டாபோட்டிகளும் சகல துறைகளிலும் ஆக்ரோஷத்துடன் முனைப்புப் பெற்றிருந்தன. ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்தனவாயும் ஒன்றில் இருந்து ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலும் ஆயுத உற்பத்தியை முன்னிறுத்தி மேலாண்மையைப் பெற்றுக் கொள்ளும் செயற் பாடுகளில் அதி தீவிரம் காட்டின. அதன் பலன் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்களை கண்டுபிடித்துக் கொண்டனர். பனிப்போர்க்காலம் என அழைக்கப்பட்ட இக்காலகட்டம் உலக அழிவுக்கான பல ஆபத்தான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றது.

இன்று சோவியத்தின் வீழ்ச்சி அல்லது சிதைவு இந்நெருக்கடியில் இருந்து உலகை நிம்மதிப் பெரு மூச்சை விடச்செய்திருக்கும் போதிலும் வேறு வகையான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.
அமெரிக்காவை தட்டிக்கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டன் வேடத்தை எடுத்துக் கொள்ள வைத்திருக்கின்றது.

இதுவரை காலமும் சோவியத் சார்பு நிலையிலிருந்த நாடுகள் சோவியத்தின் வீழ்ச்சியின் பின் இரண்டும் கெட்டான் சங்கடத்திற்குள் உள்ளாகின. இந்தியா அணிசேரா நாடுகள் என்றும் சோவியத் அணிநாடு என்றும் இரண்டு வேடங்களைப் போட்டிருந்தது. அதற்கும் மேலாக அமெரிக்காவின் எதிரணி அல்லது நம்பகத்தன்மையற்ற நாடு என்னும் எண்ணத்தையே பெற்றிருந்தது.

சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஆயுததளபாட உதவிகளும் நேரடி பாதுகாப்பும் இல்லாதொழிந்த வேளையில் இந்தியா உட்பட பலநாடுகள் சுய அளவில் படைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிடப்பட்டன.

தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டனாக அமெரிக்கா உலகைத் தன் ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் உட்படுத்தி வைக்கும் செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடத்தொடங்கியது.
அணு ஆயுதத்தின் பரம்பலைத் தடை செய்யவும் அணு ஆயுத வலிமையை வேறு நாடுகள் பெற்றுக் கொள்வதைத் தடை செய்யவும் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் "வீற்றோ" எனப்படும் அதிகாரம் பெற்ற அதி முக்கிய நாடுகளான இங்கிலாந்து, ரஷ்யா,சீனா,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவர் (International Atomic Energy Agency - IAEA ) என்ற ஒரு பக்கச் சார்பான நீதியான நோக்கமற்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது. உலக நாடுகளில் அணு ஆயுத உற்பத்தியை கண்காளிப்பதும் தடை செய்வதுமே இதன் முதன்மையான நோக்கமாகும். அணு ஆயுத உற்பத்தியை உலகில் தடை செய்வது உலக நன்மைக்கான விடயமெனினும்
அமெரிக்கா உட்பட இந்த ஐந்து நாடுகளையும் அவற்றின் அணு ஆயுத உற்பத்தியையும் வைத்திருப்பையும் இவ்வமைப்பு கட்டுப்படுத்தாது என்பதே இதிலுள்ள குறைபாடாகும். இதே நேரம் அணு ஆயுதக் குவிப்பு தடுப்பு (Nuclear Non-Proliferation Treaty -NPT) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதத்தின் முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டலைத் தடைசெய்தலும் உலக நாடுகளின் அணு ஆயுத உலைகளை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவரின் கண்காணிப்பிற்குத் திறந்து விடுதலும் ஆகும்.

இவ்வாறு உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தியையும் அதனால் பெறக் கூடிய மேலாதிக்கத்தைத் தடை செய்வதும் அமெரிக்காவின் குள்ள நரித் தந்திரமாகும். இதே காரணங்களிற்கு உட்பட மறுத்தமையைக் காரணங்காட்டியே வடகொரியாவையும் ஈரானையும் சாத்தானின் அச்சில் சேர்த்து அமெரிக்கா பிரகடனம் செய்திருந்தது. இன்று ஈரானுக்கான பொருளாதாரத் தடையையும் ஆயுத விற்பனையைத் தடை செய்வதையும் ஐ.நாவிற்கூடாக நிறைவேற்றியிருக்கின்றது. இதற்கான கால அவகாசம் கொடுக்கப் பட்டபோதிலும் ஈரான் இத்திட்டத்திற்கு உடன் படப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. அதே நேரம் அணு ஆயுத உற்பத்திக்கான யுரேனியச் செறிவாக்கலை துரிதப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இதே தேவைகள் இந்தியாவிற்கும் இருக்கின்ற போதிலும் ஈரானிற்கு எதிரான அத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணிந்து போய் விட்டதாக இடது சாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்றைய புஸ்ஸின் இந்திய விஜயம் இதே நெருக்கடியை இந்தியாவிற்கும் வலிந்து திணித்துள்ளது. சோவியத்தின் ஆதரவை இழந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது. காஸ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டினை அமெரிக்காவை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் பாகிஸ்தானினூடாக கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தாக்குதல்களைத் தணித்துக் கொள்வதற்கும் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது. தீவிரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கப் பாகிஸ்தானைத் தூண்டி இந்தியாவை அடிபணியச் செய்வதில் அமெரிக்கா வெற்றி கொண்டிருக்கின்றது என்பதை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒத்துக் கொண்டிருக்கின்றது என்பதாலேயே புரிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கான "உதவிகளைச்" செய்வதற்கான விலையாக அமெரிக்கா போடும் நிபந்தனைகள் நீதியற்ற ஒருபக்கச் சார்பான இந்தியாவின் இறைமையில் தலையிடும் அதிகப்பிரசங்கித் தனமான அசுறுத்தல் விளைவிக்கக் கூடியவையாகும்.

அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.

இந்நிபந்தனைக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும் ஒருதலைப்பட்சமானதுமாகும்" என்ற கூற்றிலிருந்தே அமெரிக்காவின் கபடத் தனத்தையும் இந்தியாவின் கையறு நிலையையும் விளங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு வைக்கப்படும் "செக்" ஆகவே உலகச் சண்டப்பிரசண்டன் புஸ்ஸின் வருகை பார்க்கப்படுகின்றது.