Sunday, February 26, 2006

கனவுலோகக் கற்பனைகளும் கொள்ளை போகும் தமிழகமும்

அரிதாரக் கனவுகள் ஒரு இனத்தைச் சீரழிக்க முடியும் என்பதற்கு தமிழ் நாட்டை விட வேறொரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. எம். ஜி ஆர் தொடங்கி வைத்த கனவுலோகப் பயணத்தில் அறுவடை செய்யப் பலர் புறப்பட்டிருக்கின்றார்கள். அதே வெற்றியின் பயனை ஜே அடைந்ததைப் போல் வேறு எவராலும் அந்த இலக்கினை அடைய முடியாமல் இருக்கின்றது.

'நான் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது மாதிரி" என்று ஒருவர் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். இவர் என்ன திருக்குறளா இல்லை நன்னூலா சொல்லி விட்டார். பசப்பு வார்த்தைகளிலேயே தமிழன் தலையில் மிளகாய் அரைக்கப் பலர் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர் என்று வேசங்கட்டிக்கொண்டு அரசியல் கட்சியும் ஆரம்பித்திருக்கின்றார் விஜயகாந்த். வந்த போன வேற்று மாநிலக்காரர் எல்லோருக்கும் தமிழனை மொட்டையடிக்க "தில் " இருக்கின்றது . இல்லையென்றால் புற்றீசல் போல் எல்லோரும் புறப்படுவார்களா?

தமிழ்த் தேசியத்தில் அக்கறை அற்றவர்களையும் கூத்தாடிகளையும் பதவியில் அமர்த்தி பட்டினியும் பரிதாபமுமாக வாழ்க்கையையே தமிழன் தொலைத்து விட்டிருப்பது போதும். காவேரியில் தண்ணீரை மறித்தவர்கள் யார்? ஆனை கட்டிப் போரடித்த தஞ்சைபூமி இன்று கட்டாந்தரையாகக் காய்ந்து போய்க்கிடக்கின்றதே. வாழ்வு அளித்து பதவி கொடுத்து ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு இவர்கள் செய்த கைம்மாறு என்ன? தமிழ் உணர்வாளர்கள் ஆள்பவர்களாய் இருந்தால் தமிழனுக்கு இந்த நிலை வந்திருக்குமா? தலைவர் கருணாநிதியிடம் இருந்த நம்பிக்கை அந்திமத்தில் இருக்கின்றது. இதுவரை கூனிக் குறுகி வாழ்ந்தது போதும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தாரை மட்டும் தான் வாழவைத்தது. இருந்தாரின் இரத்தத்தைப் பிழிந்து எடுத்து பன்னீராக வந்தவர்கள் வாய் கொப்பளிக்கக் கொடுத்தது. அதனால் தான் தமிழன் வறுமையிலும் சாதிக் கொடுமையிலும் வாடுகின்றான். பாவப்பட்ட மக்களின் முதுகில் சவாரி செய்யத் துணியும் இவர்கள் தமிழருடன் தமிழ்க் கலாச்சாரத்துடன் தொடர்பற்றவர்கள். கழைக்கூத்தாடிகளாக வந்து மக்களை உறுஞ்சிக் கொல்லும் கிருமிகளாக இருக்கின்றார்கள். வாழ வைத்த மக்களைப் பற்றி எந்தச் சிந்தனையும் இன்றி முகமூடித் திருடர்களாக இருக்கின்றார்கள்.

தமிழன் வாழ்வையும் தமிழ் மண்ணையும் கொள்ளையிடும் இவர்களை இனியும் சகித்துக் கொள்ள வேண்டுமா? ஒரு சவாலாக எடுத்துக்கொள்வோம். தமிழ் நாட்டில் உயர்ந்த சாதி என்று கூறிக் கொள்பவர்கள் வேறு ஒரு மாநிலத்திற்குச் சென்று மரியாதை பெற்றிட முடியுமா ? அப்படித்தான் உங்களால் கேட்டுவிட முடியுமா? கேட்டு விட்டால் கேட்ட வாயுமிருக்காது, நடந்து வரக் காலுமிருக்காது. தமிழன் ஒருவன் வேறு மாநிலத்தின் முதலமைச்சராகவோ அல்லது சாதாரண அமைச்சராகவோ தன்னிலும் வந்து விட முடியுமா? அவர்கள் என்ன தன் மானம் ,தன் மண்ணென்ற உணர்வின்றியா இருக்கின்றார்கள். ஏற்றத் தாழ்வு பிரிவினை தீண்டாமை என்று தமிழனின் கவனத்தைத் திசை திருப்பி கூறு போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
சினிமா மூலமும் சின்னத் திரை மூலமும் கனவை விதைக்கின்றார்கள். ஏழையின் அடுத்த நேரத்து உணவைத் திருடிக்கொண்டிருக்கின்றார்கள்

வடநாட்டினரின் நேரடி வாரிசுகளாக இன்று தமிழ் நாட்டின் அனைத்துப் பொருளாதார மூலத்தையும் குறி வைத்து அனைத்து இடங்கலிலும் வியாபிக்கத் தொடங்கியுள்ள " ஜூனுன் தமிழர்களை"ப்பற்றி தமிழ் மக்கள் மிகவும் கவனம் எடுக்க வேண்டிய நேரம் இது. தமிழ்த் தேசியத்தின் இருப்பைக் காத்துக் கொள்ள பொருளாதார கட்டமைப்புகள் தமிழர்களிடம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அமெரிக்காவில் பொருளாதாரக் கட்டமைப்புகளை கையகப் படுத்தியிருக்கும் யூதர்களால் அமெரிக்க அரசின் செயல்பாடுகள் தீர்மானிக்கப் படுவதை இந்த இடத்தில் நாம் என்ணிப்பார்க்க வேண்டும்.

இன்று சினிமா சின்னத்திரை போன்ற மீடியாவின் கூறுகள் அவர்கள் வசம் முழுவதும் சென்றிருப்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பண்பாடு கலாச்சாரத்திற்கெதிரான கருத்துருவாக்கத்தை அவர்கள் இதனூடு முனைப்புடன் பரப்புகின்றனர். தமிழ்த் தேசியத்திற்கெதிரான இந்தடவடிக்கைகள் நம் கலாச்சாரத்தை சிதைத்து விடும் அபாயம் இருக்கின்றது. அவர்களின் அடுத்த இலக்கு கேபிள் சற்றலைற் தொலைகாட்சி சேவையாக இருக்கின்றது. தி.மு.க வின் கிடுக்கிப் பிடியிலுள்ள கேபிள் சற்றலைற் தொலைக்காட்சிகள் தலைவர் கருணாநிதியின் காலத்தின் பின்னாலான தி. மு. க வின் பிளவுடன் சாத்தியமாகும்.

இதே நிலைமை தொடர்ந்து செல்லும் போது இன்னும் இரண்டு தேர்தல் காலத்தினுள் "ஜுனுன் தமிழர்கள்" சென்னையில் தேர்தலில் குதித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இன்று சின்னத்திரை நாயகிக்காக கண்ணீர் விடும் மாமிக்கள் அந்தப் பெண்ணைத் தெரிவு செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பார்ப்பனர்களையிட்டு உண்டாகும் பயம் தேவையற்றது. சில நூற்றாண்டுகளாக தமிழ்மண்ணில் வாழும் அவர்களும் தமிழனின் ஒரு கூறே. வெள்ளையரின் பிரித்தாளும் தந்திரத்தில் பலிக்கடாவாகிப் போன அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார்கள். வெள்ளையரின் ஆட்சியின் பின்னான தமிழ்த் தேசியத்தின் எழுச்சி எனக் கருதப் பட்ட கழக ஆட்சிக்காலத்தில் அளவுக்கதிகமாக ஒதுக்கப்பட்டு அதற்குண்டான தண்டனையை அவர்கள் அடைந்து விட்டார்கள். சமீபத்தில் பார்ப்பனர்கள் நடாத்திய மாநாடும் அதற்கான காரணமும் அவர்களும் மற்றைய தமிழர்களின் கூறுகளைப் போல வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதையே விளக்கி நிற்கின்றது. அரிவாள் கலாச்சாரம் தமிழர்களின் சாபக்கேடாகும். அது பார்ப்பனர்களையும் விட்டுவைக்கவில்லை.

அரிவாளை விட்டு அறிவை கைக்கொள்ள வேண்டிய நேரமிது. பார்ப்பனர்களும் இதை உனர்ந்து கொள்ள வேண்டும். அதனை விட்டு பார்ப்பனர்கள் கடந்த காலச் சுந்தரக் கனவுகளுக்கு ஆசைப்பட்டால் வடமாநிலத்தவரின் நேரடி ஒடுக்கு முறையிலும் தமிழனின் மறு கூறுகளாலும் வதைபட வேண்டி நேரும். மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்க வேண்டும்.

வாரிசுச் சண்டைகளால் ஒடைந்து போகக் காத்திருக்கும் தி. மு. க வும் வாரிசே இல்லாமல் உடைந்துபோகக் காத்திருக்கும் அ.தி.மு.க வும் - அ.தி.மு.க வாரிசு இல்லாத கட்சியாகவே எப்போதும் இருக்கின்றது- தமிழனின் தேசியத்தை பிரதிபலித்ததும் இல்லை. இனி பிரதிபலிக்கப் போவதும் இல்லை.

தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதற்கும் எழுச்சி கொள்ள வைப்பதற்கும் தேவையான சரியான தலமையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இது. ஆதர்சமான தலைவராக வை. கோ இல்லாவிட்டாலும் இப்போதிருப்பவர்களில் சிறந்த தலைவராக தமிழ் நாட்டை அழிவில் இருந்து காத்துக் கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு தமிழ் நாட்டை நகர்த்திச் செல்லக் கூடிய தகைமையுடன் வை. கோ வே இன்று தமிழரின் நம்பிக்கையாக இருக்கின்றார். வை.கோ வும் இன்று துணிச்சலான பல முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். அனைவருக்கும் கல்வி தமிழ் நாட்டில் எடுக்கவேண்டிய அத்தியாவசியமான முதன்மைத் தேவையாகும்.அவரின் துணிச்சலான முடிவுகள் தமிழனையும் தமிழ்த் தேசியத்தையும் காக்கும் என்று நம்பி அவர் கரங்களை வலுப் படுத்துவதே தமிழர் அனைவரும் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயமாகும்.

Saturday, February 25, 2006

ஈழத்தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள்

ஈழத்தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள் -இந்திய மக்களுக்கு ஒரு விளக்கம்
----------------------
ஈழப் போராட்டத்தைப் பற்றி இந்திய மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு எந்தத் தெளிபும் கிடையாது. ஆனாலும் இப்படியும் நினைக்கின்றார்கள் என்பதை அன்பர் பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய "இந்தியாவும் வான்புலிகளும்" என்ற கட்டுரை வாசிக்கநேர்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பது நோயில்லாது வாழ்வதற்கு அருமருந்தென்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்கின்றது. சிரித்துச் சிரித்து களைத்தே விட்டேன் ஐயா. ஆய்வு செய்திருக்கின்றார். பக்கா ஆய்வு. அனைவரும் படித்துப் பரவசம் அடைய வேண்டும். சில உதாரணங்கள். விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருக்கிறார்களாம். நான்கு நபர் பயணம் செய்யக் கூடியது. கல்பாக்கம்
அணுமின் நிலையம் மற்றும் கேரளா சென்னை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறிவைக்கப் படலாமாம். எந்த நூற்றாண்டுக் கதை இது என்பது விளங்கவில்லை. அவை ஏற்கனவே பாகிஸ்தானின் ஏவுகணைகளாலும் சீனாவின் ஏவு கணைகளாலும் குறிவைக்கப்பட்டுத்தான் இருக்கின்றது என்பதை யாராவது அவருக்குக் கூறுங்கள். இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புச் செலவினம் கூடுகின்றது என்ற ஒரு பட்டியல் வேறு. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை அடக்கி அழிக்க முயல்கிறது. செலவு கூடுகின்றது. சர்வ வல்லமை படைத்த பிராந்திய வல்லரசு இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகளும் பல பில்லியன்களில் தான் இருக்கின்றது. ஏன் என்று கேட்கின்றோமா?

ஈழப் போராட்டம் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்கான -பிறிதொரு இனத்தால் சகல வழிகளிலும் ஒடுக்கப்பட்டதனால் அவ்வொடுக்கு முறையில் இருந்து விடுபடவும், தப்பி உயிர் வாழவும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கவும் நடை பெறுகின்ற போராட்டம். வல்லரசு ஆசையிலோ அன்னிய நாடு பிடிக்கும் ஆசையிலோ நடத்தப்படுவதல்ல. இந்த இனவிடுதலையில் இந்தியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஈழத்தமிழ் மக்களால் தங்களுக்காக நடாத்தப் படும் இன விடுதலைப் போர். பலஸ்தீன மக்களுக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறீர்களே, அப்படியொரு ஆதரவைத் தான் உங்களிடமும் மற்றும் நாடுகளிடமும் எதிர்பார்த்தோம். ஆதரவு தருவதாக வந்தீர்கள். இலங்கையை உங்கள் அடிதொழும் நாடாக வைத்திருப்பதற்காக தமிழர்களுக்கு உதவுவது போல உதவினீர்கள். பிற நாடுகளின் கருத்துக்களையோ ஐ.நாவின் அபிப்பிராயத்தையோ எதிர்பாராது சோத்துப் பார்சல் போட்டீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறியது. சிங்கள அரசு ஓடி வந்து உங்களுடன் ஒப்பந்தம் போட்டது. உங்கள் இராணுவம் தமிழ் மண்ணிற்கு வந்தபோது பூரண கும்பம் வைத்து சந்தன மாலை போட்டு வரவேற்றோம் ஐயா. எங்களை ராங்கிகளின் சங்கிலியின் கீழ்ப் போட்டு அரைத்துப் போட்டீர்களே. பெண்களையெல்லாம் கற்பழித்து பெண்ணுறுப்பில் குண்டு வைத்து வெடித்தீர்களே. எதைச் சொல்வது எதை விடுவது. சமாதானப் படையாக வந்த நீங்கள் இரண்டிலொரு பகுதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் விட்டு விலக விரும்புகின்ற பட்சத்தில் அந்தக் கணத்திலேயே "நீங்களே என்னவோ செய்து கொள்ளுங்கள் நாங்கள் போய் வருகின்றோம் "என்று கனவான்களாக திரும்பிப் போயிருக்க வேண்டும். அகிம்ஸை தேசத்தின் புகழ் வான் முட்டியிருக்கும். யாருக்குப் பாதுகாப்பு என்று ஓடிவந்தீர்களோ அவர்களையே சுட்டுப் போடுவது எந்த விதத்தில் நியாயமானது. இரஜீவ் காந்தியின் மரணம் பற்றி பேசுகிறீர்கள். யார் முதலில் துப்பாக்கி ஏந்தியது. சண்டையை வலிந்து திணித்தது. இந்திரா காந்தி சீக்கியரின் பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். கண்ணைப் போல காத்த பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். நீங்களும் ஆயிரம் ஆயிரம் சீக்கியர்களை வீதிகளில் கொன்று போட்டீர்கள்.அத்துடன் பிரச்சனையை முடித்து விட்டீர்களே. இதோ ஒரு சீக்கிய மகனிடமே நாட்டை நம்பி கொடுத்திருக்கிறீர்களே. இன்னும் சீக்கியர்களுடன் விரோதமா பாராட்டுகிறீர்கள்.

ஈழத் தமிழ் மக்களுடன் உங்களுக்குத் தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவிற்கு அயல் நாடுகள் அனைத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவு சாத்தியமாகும். அன்றைய தினம் பாகிஸ்தானும் சீனாவும் பங்களாதேசமும் உலகப் படத்தில் இருந்து இல்லாது போக வேண்டும். அந்த நல் நாள் உங்கள் கனவு நிறைவேறும் நாள்.

இராணுவம் என்பது அரசின் அடக்குமுறைக்கான ஒரு ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத ஒரு இராணுவம் ஒரு மண்ணில் இருக்கின்றதென்றால் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது அர்த்தமாகின்றது. ஐ.நா வின் அனுமதி இன்றி அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குச் சென்ற போது அது ஆக்கிரமிப்பு யுத்தம் என்று உங்கள் படைகளை அனுப்பாது மெளனம் காத்தீர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர் தரப்பின் எந்த சம்மதமும் இல்லாத ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இலங்கைக்கு வந்தீர்கள். தமிழர் தரப்பிற்காக சிங்கள அரசுடன் நீங்களே ஒப்பம் இட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்போது இந்தியாவின் குடிமக்கள் ஆனோம். பாதுகாக்க வந்தவர்களே எம்மக்களை கொன்று கொன்று பாடையில் அனுப்பினீர்கள்.

நீங்கள் செய்தது சரியென்றால் தமிழ் நாட்டுமக்கள் உங்களைச் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்க வேண்டும். செய்யவில்லையே. ஈழத்தமிழ் மக்களா சொன்னார்கள் வரவேற்பு அளிக்க வேண்டாமென்று. இல்லையே, சகோதர மக்கள் துன்பத்தில் செத்தொழிந்தது கண்டு இரத்தக் கண்ணீர் விட்ட தமிழ் சகோதரர்கள். தமிழ் நாட்டு சகோதரர்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல் ஒரு மனத்தாங்கல் உண்டு. தாங்கள் போற்றிய தலைவனைக் கொன்று போட்டார்கள் என்று. தங்கள் தலைவன் தாண்டவம் ஆடும் போது தடுக்காது விட்டதனால் அத்துர் மரணத்தில் அவர்களுக்கும் பங்குண்டே. யாரால் மறுக்க முடியும்.

இத்தனைக்கும் காரணம் ஹிந்திப் பெரும்பான்மையைக் கொண்ட இராமாயண இராமனின் மேலாண்மையை விரும்பும் நடுவண் அரசின் நீதியில்லாத நடைமுறையே. தமிழ் நாட்டு மக்கள் சொன்னால் உடனும் கேட்டு செயல்படுத்தக் கூடியவர்களா அவர்கள். யார் யாரினதோ முதுகில் ஏறி ஆட்சி செய்பவர்கள் சொல் கேட்பார்களா? இல்லாவிட்டால் ஒரு மாநில மக்களின் ஜீவாதார உரிமையான காவேரித் தண்ணீருக்கே இத்தனை காலம் கடத்துவார்களா? ஏன் நீங்களும் இந்தியக் குடி மக்கள் தானே ? ஏன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இழுத்தடிக்கப் படுகின்றது. யாராவது கேட்க முடியுமா? கேட்டது கிடைக்காவிட்டால் உங்களால் அவர்களை என்ன செய்து விட முடியும். 21 ஆம் நூற்றாண்டிலும் வயிற்றுப் பசிக்காக எலிகளைச் சாப்பிடும் மக்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.

ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பாவப்பட்ட மக்களை ஒரு வல்லரசின் போட்டியாகப் பார்ப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா? தமிழீழம் தான் உங்களுக்கு ஆபத்தென்றால் பாகிஸ்தானும் பங்களாதேசமும் உங்களைக் கபளீகரம் செய்து விட எத்தனை நேரம் ஆகும். அவ்வளவு வல்லமையற்றதா இந்திய நாடு . நடுவண் அரசின் பூச்சுற்றல்களைத் தங்கள் பிரச்சாரப் பீரங்கிகளில் ஊதிக் கொண்டிருக்கும் இவர்களை எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறீர்கள். இரஜீவை துப்பாக்கியினால் அடித்த சிங்களவருடன் உங்களுக்கு அப்படியென்ன பற்றுதல். சிங்களவர்க்கும் இன்னும் புரியவில்லை தாங்களும் பலியாடுகளே என்று. தெரிகின்ற காலம் வரும். அப்போது இதே போராட்டம் தமிழ் சிங்களம் என்ற இரு நாடுகளில் நடக்கக் கூடும்.

ஈழத்து மக்கள் இந்தியாவைச் சீண்டியிருக்கிறார்களா? இல்லை இந்தியா ஈழத்தமிழ் மக்களைச் சீண்டிக் கொண்டிருக்கின்றதா? 1991 இரஜீவின் மரணத்தின் பின்னால் உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம். இந்தியாவால் ஈழப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சீண்டல்களுக்கு எங்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.

நாம் இந்தியா என்று நினைப்பது தமிழ் நாட்டு மக்களைத் தான். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு சங்க காலத்தில் இருந்தே இருக்கின்றது. நிறைந்தளவு சாட்சியங்கள் இருக்கின்றது. எங்கள் மன்னன் எல்லாளன் ஒரு சோழ இளவரசன் தான். 44 ஆண்டுகள் அநுராத புரத்திலிருந்து அரசாண்டான். இராசேந்திர சோழமன்னன் பொலநறுவையில் இருந்து அரசாண்டான். வெள்ளையருக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே கிடையாது. சேர சோழ பாண்டிய நாடுகள் என்று தமிழ் நாடுகள் இருந்தது. அவற்றுடன் எங்களுக்கு இரத்த உறவுகள் இருந்தது. நீங்கள் இந்தியராய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தமிழர்கள். அந்த உறவுதான் எங்களுக்கும் உங்களுக்கும். அதற்கு முன்னாலும் பின்னாலும் எதுவும் கிடையாது.

எங்கள் போராட்டம் எங்கள் எங்கள் இருப்புக்கான போராட்டம். யாருடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நடந்தே தீரும். சரித்திரம் அப்படித்தான் சொல்கின்றது. உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை எந்த ஆயுதமும் நசித்துவிட முடியாது.

அன்பர் பாஸ்டன் பாலாஜியின் "இந்தியாவும் வான் புலிகளும்" பார்க்க www.tamiloviam.com/unicode/06300505.asp

Thursday, February 16, 2006

கவிதையும் சமயமும்

அழகாயிருக்கலாம் அல்லது அவஸ்தையாயிருக்கலாம் 'பச்' என்று மனதோடு ஒட்டிக் கொள்வது நல்ல கவிதையாயிருக்கும். கவிதை மனதோடு சம்பந்தப்பட்டது. அதற்கு கோட்பாடுகள் கிடையாது. கோட்பாடு அறிவோடு சம்பந்தப்பட்டது. சமயமும் கோட்பாடுகள் அற்றது. கொள்கை கொண்டது. அதனால் தான் அறிவியல் ஒன்றாயிருக்கும் போது சமயம் பலவாயிருக்கின்றது. விதிகளற்றது. நிரூபணத்திற்கு அப்பால்பட்டது. நம்பிக்கை சார்ந்தது.

கவிதையும் மனதோடு சம்பந்தப்பட்டது. மனதில் நின்ற அனுபவங்கள், மனதில் எழுந்த சிந்தனைகளைச் சொல்லப் போவது. வாழ்க்கை பற்றிய மனித மனத்தின்
நம்பிக்கைகளைச் சொல்லப் போவது. அறிவின் தேடலின் பாதை குறுகியது. விதிகளின் வீச்சில் சுருங்கியது. நெகிழ்வுத்தன்மையற்றது. கவிதை நெகிழ்வுத் தன்மை கொண்டது. விட்டு விலகலும் ஒட்டி வருதலும் சாத்தியமானது.

"நல்ல கவிதையின் உச்சநிலை சமயத்தின் கீழ் நிலை. நல்ல கவிஞர்களின் தேடல் சமயத்தில் சென்று கலப்பதைத தவிர்க்க முடியாது" - ஓஷோ

நல்ல கவிதையின் தேடல் வாழ்க்கை பற்றியது. வாழ்க்கையின் தேடல், பிறந்ததன் காரணம் பற்றியது. சமயத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாக/பாடல்களாக இருந்திருக்கின்றன. சமய குரவர்கள் சிறந்த கவிஞர்களாக இருந்திருக்கக் கூடும். வாழ்க்கை பற்றிய தேடல் சமயத்திற்கு இட்டுச் சென்றிருக்கக் கூடும். பைபிள் வாசகங்கள் சங்கீதமாக இருக்கின்றன. ஜென் தத்துவங்கள் கவிதைகளாக இருக்கின்றன.

"பழைய குளம், அதில்
எட்டிக் குதித்தது தவளை
தண்ணீரின் ஓசை "
ஜென் தத்துவமொன்று.

" நாதமே பிரம்மம்"

ஓம் என்பது பிரணவம். பிரணவம் பிரபஞ்சமடக்கியது. பிற்காலத்தில் கண்ணதாசன் நல்ல கவிஞனாக இருந்தான். கவிதையின் உச்சத்தில் சமயத்தைச் சென்றடைந்தான். அர்த்தமுள்ள இந்து மதமும் யேசு காவியமும் படைத்தான்.

மிக மேலான கவிதை , ஆன்மீகத்தின் கீழ்நிலை வடிவம்- அதுதான் அவை சந்திக்கும் புள்ளி.

"நீராடை போர்த்திய பூமி
நிமிடத்தில் நீங்கும் காற்று
நிலவுக்கும் கதிருக்கும்
பிரித்த பொழுது
பஞ்சமேயில்லாத
பிரபஞ்சம்
நடுவில் 'நான்' "

பிரமிப்பாய் இருக்கின்றது.

"மதத்திற்கும் கவிதைக்கும் ஒரே மொழிதான்.
சொற்கள் வேறுபடும். ஆனால் அவை ஏதாவது புள்ளியில் சந்தித்து விடும். அந்த சந்திப்பு மையம் தான், அந்தக் கவிதையின் கரு.- ஓஷோ