Sunday, February 26, 2006

கனவுலோகக் கற்பனைகளும் கொள்ளை போகும் தமிழகமும்

அரிதாரக் கனவுகள் ஒரு இனத்தைச் சீரழிக்க முடியும் என்பதற்கு தமிழ் நாட்டை விட வேறொரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. எம். ஜி ஆர் தொடங்கி வைத்த கனவுலோகப் பயணத்தில் அறுவடை செய்யப் பலர் புறப்பட்டிருக்கின்றார்கள். அதே வெற்றியின் பயனை ஜே அடைந்ததைப் போல் வேறு எவராலும் அந்த இலக்கினை அடைய முடியாமல் இருக்கின்றது.

'நான் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது மாதிரி" என்று ஒருவர் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். இவர் என்ன திருக்குறளா இல்லை நன்னூலா சொல்லி விட்டார். பசப்பு வார்த்தைகளிலேயே தமிழன் தலையில் மிளகாய் அரைக்கப் பலர் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர் என்று வேசங்கட்டிக்கொண்டு அரசியல் கட்சியும் ஆரம்பித்திருக்கின்றார் விஜயகாந்த். வந்த போன வேற்று மாநிலக்காரர் எல்லோருக்கும் தமிழனை மொட்டையடிக்க "தில் " இருக்கின்றது . இல்லையென்றால் புற்றீசல் போல் எல்லோரும் புறப்படுவார்களா?

தமிழ்த் தேசியத்தில் அக்கறை அற்றவர்களையும் கூத்தாடிகளையும் பதவியில் அமர்த்தி பட்டினியும் பரிதாபமுமாக வாழ்க்கையையே தமிழன் தொலைத்து விட்டிருப்பது போதும். காவேரியில் தண்ணீரை மறித்தவர்கள் யார்? ஆனை கட்டிப் போரடித்த தஞ்சைபூமி இன்று கட்டாந்தரையாகக் காய்ந்து போய்க்கிடக்கின்றதே. வாழ்வு அளித்து பதவி கொடுத்து ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு இவர்கள் செய்த கைம்மாறு என்ன? தமிழ் உணர்வாளர்கள் ஆள்பவர்களாய் இருந்தால் தமிழனுக்கு இந்த நிலை வந்திருக்குமா? தலைவர் கருணாநிதியிடம் இருந்த நம்பிக்கை அந்திமத்தில் இருக்கின்றது. இதுவரை கூனிக் குறுகி வாழ்ந்தது போதும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தாரை மட்டும் தான் வாழவைத்தது. இருந்தாரின் இரத்தத்தைப் பிழிந்து எடுத்து பன்னீராக வந்தவர்கள் வாய் கொப்பளிக்கக் கொடுத்தது. அதனால் தான் தமிழன் வறுமையிலும் சாதிக் கொடுமையிலும் வாடுகின்றான். பாவப்பட்ட மக்களின் முதுகில் சவாரி செய்யத் துணியும் இவர்கள் தமிழருடன் தமிழ்க் கலாச்சாரத்துடன் தொடர்பற்றவர்கள். கழைக்கூத்தாடிகளாக வந்து மக்களை உறுஞ்சிக் கொல்லும் கிருமிகளாக இருக்கின்றார்கள். வாழ வைத்த மக்களைப் பற்றி எந்தச் சிந்தனையும் இன்றி முகமூடித் திருடர்களாக இருக்கின்றார்கள்.

தமிழன் வாழ்வையும் தமிழ் மண்ணையும் கொள்ளையிடும் இவர்களை இனியும் சகித்துக் கொள்ள வேண்டுமா? ஒரு சவாலாக எடுத்துக்கொள்வோம். தமிழ் நாட்டில் உயர்ந்த சாதி என்று கூறிக் கொள்பவர்கள் வேறு ஒரு மாநிலத்திற்குச் சென்று மரியாதை பெற்றிட முடியுமா ? அப்படித்தான் உங்களால் கேட்டுவிட முடியுமா? கேட்டு விட்டால் கேட்ட வாயுமிருக்காது, நடந்து வரக் காலுமிருக்காது. தமிழன் ஒருவன் வேறு மாநிலத்தின் முதலமைச்சராகவோ அல்லது சாதாரண அமைச்சராகவோ தன்னிலும் வந்து விட முடியுமா? அவர்கள் என்ன தன் மானம் ,தன் மண்ணென்ற உணர்வின்றியா இருக்கின்றார்கள். ஏற்றத் தாழ்வு பிரிவினை தீண்டாமை என்று தமிழனின் கவனத்தைத் திசை திருப்பி கூறு போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
சினிமா மூலமும் சின்னத் திரை மூலமும் கனவை விதைக்கின்றார்கள். ஏழையின் அடுத்த நேரத்து உணவைத் திருடிக்கொண்டிருக்கின்றார்கள்

வடநாட்டினரின் நேரடி வாரிசுகளாக இன்று தமிழ் நாட்டின் அனைத்துப் பொருளாதார மூலத்தையும் குறி வைத்து அனைத்து இடங்கலிலும் வியாபிக்கத் தொடங்கியுள்ள " ஜூனுன் தமிழர்களை"ப்பற்றி தமிழ் மக்கள் மிகவும் கவனம் எடுக்க வேண்டிய நேரம் இது. தமிழ்த் தேசியத்தின் இருப்பைக் காத்துக் கொள்ள பொருளாதார கட்டமைப்புகள் தமிழர்களிடம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அமெரிக்காவில் பொருளாதாரக் கட்டமைப்புகளை கையகப் படுத்தியிருக்கும் யூதர்களால் அமெரிக்க அரசின் செயல்பாடுகள் தீர்மானிக்கப் படுவதை இந்த இடத்தில் நாம் என்ணிப்பார்க்க வேண்டும்.

இன்று சினிமா சின்னத்திரை போன்ற மீடியாவின் கூறுகள் அவர்கள் வசம் முழுவதும் சென்றிருப்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பண்பாடு கலாச்சாரத்திற்கெதிரான கருத்துருவாக்கத்தை அவர்கள் இதனூடு முனைப்புடன் பரப்புகின்றனர். தமிழ்த் தேசியத்திற்கெதிரான இந்தடவடிக்கைகள் நம் கலாச்சாரத்தை சிதைத்து விடும் அபாயம் இருக்கின்றது. அவர்களின் அடுத்த இலக்கு கேபிள் சற்றலைற் தொலைகாட்சி சேவையாக இருக்கின்றது. தி.மு.க வின் கிடுக்கிப் பிடியிலுள்ள கேபிள் சற்றலைற் தொலைக்காட்சிகள் தலைவர் கருணாநிதியின் காலத்தின் பின்னாலான தி. மு. க வின் பிளவுடன் சாத்தியமாகும்.

இதே நிலைமை தொடர்ந்து செல்லும் போது இன்னும் இரண்டு தேர்தல் காலத்தினுள் "ஜுனுன் தமிழர்கள்" சென்னையில் தேர்தலில் குதித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இன்று சின்னத்திரை நாயகிக்காக கண்ணீர் விடும் மாமிக்கள் அந்தப் பெண்ணைத் தெரிவு செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பார்ப்பனர்களையிட்டு உண்டாகும் பயம் தேவையற்றது. சில நூற்றாண்டுகளாக தமிழ்மண்ணில் வாழும் அவர்களும் தமிழனின் ஒரு கூறே. வெள்ளையரின் பிரித்தாளும் தந்திரத்தில் பலிக்கடாவாகிப் போன அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார்கள். வெள்ளையரின் ஆட்சியின் பின்னான தமிழ்த் தேசியத்தின் எழுச்சி எனக் கருதப் பட்ட கழக ஆட்சிக்காலத்தில் அளவுக்கதிகமாக ஒதுக்கப்பட்டு அதற்குண்டான தண்டனையை அவர்கள் அடைந்து விட்டார்கள். சமீபத்தில் பார்ப்பனர்கள் நடாத்திய மாநாடும் அதற்கான காரணமும் அவர்களும் மற்றைய தமிழர்களின் கூறுகளைப் போல வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதையே விளக்கி நிற்கின்றது. அரிவாள் கலாச்சாரம் தமிழர்களின் சாபக்கேடாகும். அது பார்ப்பனர்களையும் விட்டுவைக்கவில்லை.

அரிவாளை விட்டு அறிவை கைக்கொள்ள வேண்டிய நேரமிது. பார்ப்பனர்களும் இதை உனர்ந்து கொள்ள வேண்டும். அதனை விட்டு பார்ப்பனர்கள் கடந்த காலச் சுந்தரக் கனவுகளுக்கு ஆசைப்பட்டால் வடமாநிலத்தவரின் நேரடி ஒடுக்கு முறையிலும் தமிழனின் மறு கூறுகளாலும் வதைபட வேண்டி நேரும். மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்க வேண்டும்.

வாரிசுச் சண்டைகளால் ஒடைந்து போகக் காத்திருக்கும் தி. மு. க வும் வாரிசே இல்லாமல் உடைந்துபோகக் காத்திருக்கும் அ.தி.மு.க வும் - அ.தி.மு.க வாரிசு இல்லாத கட்சியாகவே எப்போதும் இருக்கின்றது- தமிழனின் தேசியத்தை பிரதிபலித்ததும் இல்லை. இனி பிரதிபலிக்கப் போவதும் இல்லை.

தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதற்கும் எழுச்சி கொள்ள வைப்பதற்கும் தேவையான சரியான தலமையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இது. ஆதர்சமான தலைவராக வை. கோ இல்லாவிட்டாலும் இப்போதிருப்பவர்களில் சிறந்த தலைவராக தமிழ் நாட்டை அழிவில் இருந்து காத்துக் கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு தமிழ் நாட்டை நகர்த்திச் செல்லக் கூடிய தகைமையுடன் வை. கோ வே இன்று தமிழரின் நம்பிக்கையாக இருக்கின்றார். வை.கோ வும் இன்று துணிச்சலான பல முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். அனைவருக்கும் கல்வி தமிழ் நாட்டில் எடுக்கவேண்டிய அத்தியாவசியமான முதன்மைத் தேவையாகும்.அவரின் துணிச்சலான முடிவுகள் தமிழனையும் தமிழ்த் தேசியத்தையும் காக்கும் என்று நம்பி அவர் கரங்களை வலுப் படுத்துவதே தமிழர் அனைவரும் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயமாகும்.

1 comment:

Anonymous said...

யாரைத் தான் நம்புவது