Wednesday, January 11, 2006

தமிழீழம் : இறுதிப் போர் ?

2002 இல் கைச்சாத்தாகி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த சமாதான ஒப்பந்தம் என்றுமில்லாதவாறு கடும் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் அடுத்து என்ன ? என்ற கேள்வி பலராலும் கேட்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

என்ன நடக்கும் என்ற நிஜத்திற்கு அப்பால் பல ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப் பட்ட அனைத்துத் தரப்பும் பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

சமாதான உடன்பாட்டாளர்கள் என்ற நிலையில் இருக்கும் நோர்வேயினதும் சமாதான இணைநாடுகளினதும் செயற்பாடுகளை மீறிய வகையில் களநிலவரம் வரலாறு காணாத கொடிய போர் ஒன்றுக்கான திசையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களும் மக்கள் எழுச்சிப் படை என்ற பெயரில் இடம் பெறும் பதிலடிகளும் சாமாதானத்தின்பால் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கைகளைக் குறைத்த வண்ணமே இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அரசு சாரா தொண்டர் அமைப்புக்கள் பல தமது செயற்பாடுகளை இடைநிறுத்தி வெளியேறிக்கொண்டிருக்கின்றன. பல நாடுகள் தமது பிரஜைகளை வடக்கு கிழக்குப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.

எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் வகையில் ஆளும் சுதந்திர முன்னணியின் கூட்டாளிக் கட்சியான ஜே.வி.பி நோர்வேயின் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை நிராகரித்ததுடன் ' அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து நோர்வே விலகினால் மட்டும் அந்த நாட்டுடன் எந்தப் பிரச்சனை குறித்தும் பேசுகின்றோம். நோர்வேயை சிறிலங்காவின் எதிரணியாகவே பார்க்கின்றோம். ' எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது. மற்றொரு கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ' வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்பதற்கு சான்றுகள் உள்ளதா ? இருந்தால் நேரடி விவாதத்திற்கு தயார் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். தென் இலங்கைக் கட்சிகள் மட்டுமன்றி மக்களும் ஒரு போரினை விரும்பும் மன நிலயிலேயே இருக்கின்றனர் என்பதை மக்கள் முன்னணிகள் விடுக்கும் அறிக்கைகளில் இருந்து கணித்துக் கொள்ளலாம். அண்மையில் திருமலையில் ஐந்து மாணவர்கள் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. படையினர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது அராஜகம் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு சிங்கள முன்னனி என்ற அந்த அமைப்பு அறிக்கை விட்டிருக்கின்றது.

தமிழர் தரப்பில் இராணுவத்தின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பொங்கி எழும் மக்கள் படை என்ற பெயரில் பதில் தாக்குதலும் கண்டன அறிக்கைகளும் வெளியிடப் படுகின்றது. இத்தாக்குதல்கள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுத லைப் புலிகளாலேயே நடைபெறுகின்றது என்னும் அரசின் குற்றச் சாட்டுகளிற்கு பதில் கூறிய கண்காணிப்புக் குழுத்தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் 'விடுதலைப் புலிகளே இத்தாக்குதல்களை நடத்தினார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை ' என தமது அறிக்கையில் குறிப்பிட்ட அவர் எனினும் நன்கு பயிற்சி பெற்றவர்களாலேயே இத்தாக்குதல்கள் நடை பெற்றிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் மக்களைப் பயிற்றுவிப்பதாக விடுதலைப் புலிகள் பகிரங்கமாகவே அறிவித்து அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கண்காணிப்புக் குழுவின் தலைவரின் அறிக்கை பொருள் பொதிந்ததாகவே காணப் படுகின்றது.

அதே நேரம் 08 ஜனவரி 2006 இல் தமிழீழத் தொலைக்காட்சியில் நடை பெற்ற கருத்தரங்கு ஒன்றில் மூத்த உறுப்பினரான கா. வே. பாலகுமாரன் கூறிய கூற்றையும் இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ' சிறிலங்கா இராணுவத்தால் மக்கள் தாக்கப் பட்டு அவர்கள் இடம் பெயரும் போது அந்த மக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த மக்களைக் கொண்டே இராணுவத்தைத் திருப்பித் தாக்கும் படையையும் தயாரித்து ஒரு பாரிய வராலாற்றுத் திருப்பத்தை வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக உருவாக்கப் போகின்றோம் என்பதுதான் எங்களது தீர்க்கமான தீர்மானகரமான அரசியல் இராணுவரீதியான சிந்தனையும் கூட என்று தெரிவித்திருக்கின்றார்.

இதே வேளை சமாதானப் பேச்சுவார்த்தக்கு இரு தரப்பையும் கொண்டு வர வேண்டிய தார்மீக நிலைப்பாட்டைக் கடந்து அமெரிக்கா விடுதலைப் புலிகளை மட்டும் கடும் தொனியில் எச்சரித்துள்ளது. ' இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறையை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் ' என்று அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெட் கொழும்பில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பில் அமெரிக்க அரசின் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். 'சிறிலங்கா அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கவும் தன்னைப் பாதுகாக்கவும் நாம் உதவுகின்றோம். வர்த்தகர்களுடனான கூட்டத்தில் அமெரிக்கத் தூதுவர் ஏன் இவ்வாறு கடுமையாகப் பேசுகின்றார் என்ற கேள்வி எழக் கூடும். அமைதி முயற்சிகள் வர்த்தக முயற்சிகளுக்கு அவசியமானது ' என்று தெரிவித்ததோடு பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் பற்றி எதுவித அனுதாபமும் தெரிவிக்காத அமெரிக்கா இலங்கை மீதான கரிசனைக்கான காரணத்தையும் தெளிவு படுத்தியுள்ளது. உலகின் ஜனநாயகத்தின் காவலர்களாகத் தம்மை இனங்காட்டி இன்று ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் வலிந்து யுத்தங்களைத் திணித்து அதனால் அமெரிக்க வரி செலுத்துபவர்கள் தலையில் இரண்டு திரிலியன் டொலர்களைக் கடனாகச் சுமத்தியிருக்கும் அமெரிக்காவின் ஜனநாயக அணுகு முறை இவ்வாறு மிரட்டலாக வெளிப்பட்டிருக்கின்றது. அங்க வீனர்களான அமெரிக்க இராணுவ வீரர்களின் ஆயுள்கால பராமரிப்புச் செலவும் இதனுள் அடங்கும் என்று அண்மையில் வெளியிடப் பட்ட ஆய்வறிக்கை கூறுகின்றது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை வழி மொழியும் அவுஸ்திரேலியாவும் சம்பவங்களைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கர வாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை அமைதிப் பேச்சு வார்த்தகளைக் காரணம் காட்டி நோர்வே நிராகரித்துள்ளது. அதே நேரம் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்படையான இலங்கை அரசிற்கான உதவிகளாக இருக்காது என்பதை சமீபத்தில் இடம் பெற்ற அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஊகிக்க முடிகின்றது. முக்கிய இடதுசாரித் தலைவரான பரதன் உட்பட தமிழகக் கட்சிகளின் நிலைப்பாடு இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீட்டை எதிர்ப்பதாகவே இருக்கின்றன.

இதற்கிடையில் ஊடகங்களும் பிரபல அரசியல் ஆய்வாளர்களும் யுத்தம் ஏற்பட்டால் யுத்தத்தின் போக்கு எவ்வாறு இருக்கக் கூடும் என்பதை ஆரூடம் கூறத் தொடங்கி விட்டனர்.

இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் இலக்கு ' யாழப்பாணம் தான் ' என்று ரொய்டர் செய்தித் தாபனத்தின் அரசியல் ஆய்வாளர் பீற்றர் ஆப்ஸ் அடித்துக் கூறுகின்றார்.

'' யாழ்ப்பாணம் தான் அவர்களின் பிரதான இலக்கு '' என்று வழி மொழிகின்றார் பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ். ''மரபுவழிப் படைத்தாக்குதலில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் பல்லவீனமானவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களின் கொரில்லாத் தாக்குதல் பலம் வாய்ந்ததாக இருக்கும்" என்றும் கருத்துத் தெரிவிக்கின்றார்.

அதே நேரம் தாக்குதலுக்குள்ளாகும் இலக்குகளாக கடல்வழி விநியோகப் பாதையும் பலாலி விமானத்தளமும் இருக்கக் கூடுமெனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். யாழப்பாணக் குடா நாட்டில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் இராணுவத்தினருக்குமான விநியோகப் பாதைகளாக இவ்விரு பாதைகளுமே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்சம் விமான ஓடுபாதையும் எரிபொருள் களஞ்சியங்களும் தாக்கி அழிக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இத்தாக்குதல் வெற்றியடையக் கூடும் என்ற எதிர்வு கூறலுக்கு பின் வரும் காரணங்களை எடுத்துக்காட்டுகின்றார். " யாழ்ப்ப்பாணக் குடாநாடு சந்தேகமில்லாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. ஆனாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் எப்படி இத்தனை கைக்குண்டுகளும் கண்ணிவெடிகளும் கடத்தி வரப்பட்டன ? " என்று கேள்வி எழுப்புகின்றார் இக்பால் அத்தாஸ்.

சிறிலங்காவிற்கான அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிகளைத் தொடர்ந்து இராணுவ உதவிகள் அதிகரிக்கக் கூடும் என்றும் இவ்வுதவிகள் ஆயுதங்களையும் பெரும் தொகை நிதியையும் கொண்டிருக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறும் சில ஆய்வாளர்கள் சர்வதேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பும் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். சர்வ தேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பாது என்பதை சமாதான சபையின் தலைவர் ஜெகான் பெரேராவும் வழி மொழிகின்றார்.

யுத்தம் வரப்போகின்றது என்பதை எதிர்பார்க்கும் அனைத்துத் தரப்பும் அப்படி வந்தால் அது இதுவரை இல்லாத வகையில் மிகவும் கடுமையானதாக இருக்கக் கூடும் என்பதையும் ஒத்துக் கொள்கின்றார்கள்.

2 comments:

Kanags said...

நல்ல பதிவு. நன்றி.

இளந்திரையன் said...

வரவுக்கு நன்றி கனக்ஸ். இன்றைய நிலை பற்றிய உங்கள் "பார்வை" ஐயும் எடுத்து வரலாமே ? புலம் பெயர் மக்களின் மனக்குறிப்பை சர்வதேசத்துக்கும் பிரகடனப் படுத்துவதாய் இருக்கக் கூடும்....