Thursday, January 19, 2006

கீற்றும் ஆனா ரூனாவும் -எளக்கிய பதர்களும்

கீற்று சிற்றிதழில் ஆனா ரூனா அவர்கள் எழுதிய "பயங்கர வாதத்தின் வேர்களும் விழுதுகளும்" பார்த்தேன். "துப்பட்டா பிடி" சண்டை பிடி தமிழக இலக்கியச் சூழலில் இவ்வாறான கேள்விகள் எழுவது சற்று ஆச்சரியமாகவே இருந்தது.

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தமிழர் நன்மைக்கோ தன் அரசியல் நன்மைக்கோ கூட ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி உச்சரிப்பதே பாவம் என்பது போலவும் " தமிழகம் காஸ்மீர் ஆகுமா ? " என்று கேட்டு நாகேஷின் நட்சத்திர ஜோக்கை கேட்டவர்கள் போலவும் குலுங்கிச் சிரித்து கும்மியடிக்கும் எளக்கியக்காரரும் காலில் விழுந்து கட்டவுட் வைப்பதெல்லாம் தன்மானத் தமிழனின் தனி மனித சுதந்திரம் என்று வாளாவிருக்கும் இலக்கியச் சிங்கங்களும் பெண்பித்துச் சாமியார்களின் அழுகைக்குப் பொங்கியெழுந்து ஆதரவு கொடுக்கும் அரைவேக்காடுகளும் குமுறுவதையும் கூப்பாடு போடுவதையும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அழுகிய சூழலில் இவரின் கட்டுரை மனிதம் பற்றிய சில நம்பிக்கைகளை விதைத்துச் செல்கின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தின் மனச்சாட்சியை நோக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்குமா ? இல்லை கிடப்பில் போடப் படுமா ? என்பதற்கும் அப்பால் மக்களின் மனக் கதவுகளை வலிமையுடன் தட்டுமா ? என்பதே எனது கேள்வி.

" துப்பாட்டா " விடயங்களுக்கெல்லாம் துடித்துப் பதைத்து கூட்டமெல்லாம் போடும் எளக்கிய வாதிகளும் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று சொரிந்து கொள்ளும் பேதைகளும் வீட்டில் என்னென்ன கோலங்களில் இருக்கின்றார்கள் என்பதை போய்ப் பார்த்தால் தான் தெரியும். " நீதி போதனை செய்பவர்களுக்கு நான் செவி சாய்க்க வேணுமானால் ,அவர்கள் அவ்வாறு போதனை செய்யத் தகுதி உடையவர்களாக இருக்கவேணும் " என்று சார்வாகன் அவர்கள் சொல்வதைப் போல் எதுவுமில்லாது இலக்கியம் என்று பதிப்பதிலெல்லாம் ஊருக்குபதேசம் செய்யும் இவர்கள் என்னத்தை புதிதாகக் கிழித்து விடப் போகின்றார்கள்.

"பார்ப்பானின் பாதுகாப்புக் கோவணம் " என்று சக எழுத்தாளன் என்பதற்கும் அப்பால் ஒரு மனிதனாகக் கூட பார்க்கவியலாத பிரபலங்கள். ஆணாதிக்கத்திற்கெதிரான சமூகப் பிரக்ஞயை வேண்டி எழுத்து வேள்வி செய்யவென எழுந்து வந்த குட்டி ரேவதி எஸ்.ரா வின் சீண்டலுக்கு மட்டும் துடித்தெழுந்தது ஏன் ? வீட்டில் மலினப் படுத்திய பெண்மையை வெளியிலும் மலினப் படுத்த துணிந்த எஸ்.ரா போன்றவர்களுக்காக பொறி பறக்கப் பேசுபவர்கள் பற்றியும் யோசிக்கத் தோன்றுகின்றது.

மறுத்தானுக்கு மறுத்தான் அதற்கு மறுத்தான் என்று இலக்கிய வரட்சியை ஈடு செய்ய காகிதத் தோரணங்கள் கட்டிக் கொள்ளும் இவர்களுக்கு காத்திரமான சிலரும் கதை கூற வருவது சகிக்க முடியாமல் இருக்கின்றது. நடிகர்களின் மலர் தூவிகளும் இலக்கியப் பழுதைகளும் அடிக்கும் கொட்டத்தில் நேர விரயம் தவிர என்ன இருக்கின்றது. தங்கள் சமுதாய முன்னேற்றம் கருதி ஒரு தீர்க்க தரிசனம் அல்ல ஒரு தீவட்டியாவது கிடைக்காதா என்று உங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிக்கும் இலக்கியப்பாமரனுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா ?

நன்றி: கீற்று. கொம்
ஆனாரூனாவின் கட்டுரை www.keetru.com/literature/essays/aanaarunaa_16.html

No comments: