Wednesday, January 18, 2006

இந்தியா எங்கே போகின்றது ?

இந்தியா எங்கே போகின்றது ? கேள்வி சுவாரஸ்யமானது. ஆனால் பதில் என்னவோ இந்தியா என்ற நாட்டிற்கே ஆபத்தானது. இது என் பார்வை என்பதை முதலில் சொல்லிக் கொள்கின்றேன். பார்வையின் கோணம் சரியா இல்லையா என்பதை விவாதித்துப் பார்க்க நான் தயார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் சீனாவின் அபரிமிதமான பொருளாதார மற்றும் சனத்தொகை வளர்ச்சி. இது இதுவரை இருந்து வரக்கூடிய ஐரோப்பிய சார்பு உலக நலன்களை வேருடன் புரட்டிப் போடக் கூடியது. முதலில் ஐரோப்பிய சார்பு உலக நல எவ்வாறு முன்னெடுக்கப் படுகின்றது என்பதை சற்று பார்க்கலாம். ஐரோப்பிய சார்பு உலக நலன் பல வழிகளில் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

பொருளாதார சுரண்டல். முதன்மையான வழிமுறையாக கையாளப் படுகின்றது. காலனித்துவ காலத்தின் நேரடிச் சுரண்டலும் அதைத் தொடர்ந்த நவீன காலத்தின் மறைமுகச் சுரண்டலுமாக இது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இம்மறைமுக பொருளாதாரச் சுரண்டல் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதையும் நுகர்வோர் பொருளாதார நாடுகளாகத் தொடர்ந்தும் இந்நாடுகளை வைத்திருப்பதை ஊக்குவிப்பதுமாக நடை பெறுகின்றது. நுகர்வோர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது ஐரோப்பிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு உதவிசெய்யும். உற்பத்திப் பொருட்கள் பெரும் பாலும் தொழில் நுட்பம் சார்ந்தவையாக ஆடம்பரப் பொருட்களாகவும் அழிவுப்பொருட்களாகவும் மிகுந்து காணப்படுகின்றது. உணவுப் பொருட்கள் விவசாயப் பொருட்களின் உதவிகள் மட்டுப் படுத்தப் பட்டதாகவும் காணப் படுவதும் அவற்றின் சுய உற்பத்திகள் ஊக்குவிக்கப் படாமலும் தடைகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. ஜீ 8 போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகள் விவசாய மானியத் தடையை வலியுறுத்துவது சுய உற்பத்தியை வளரும் நாடுகளில் ஊக்குவிக்கப் பெரும் தடையாகும். கடன் மீளச் செலுத்துவதற்கான விலக்களிப்பு பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் தொழில் முயற்சியையும் சுரண்டலையும் ஊக்குவிக்க உலக வங்கி போடும் தூண்டில் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மேற்குலக நன்மை சார்ந்த உலகப் போக்கு பொருளாதார ரீதியில் இவ்வகையாக நடைமுறைப் படுத்தும் வேளையில் மத ரீதியான கருத்துச் சிதைவுகள் ரோமிலிருந்து ஊக்குவிக்கப் படுகின்றது. நான் இப்படிச் சொல்லும் போது யாருடைய மத நம்பிக்கையையும் நான் சேதப் படுத்தவில்லை என்பதை கூறிக் கொள்கின்றேன். இவ்வகையான கருத்துச் சேதம் இலத்தீன் அமெரிக்க ஆசிய ஆபிரிக்க நாட்டு மக்களிடம் வெகுவாக எடுபடுகின்றது என்பதுடன் ஐரோப்பிய அமெரிக்க மக்களின் சுய சிந்தனையையும் மழுங்கடித்து முதலாளித்துவத்தின் சுரண்டலை ஏதிர்ப்பில்லாமல் நடைபெற வழி சமைத்துள்ளது. நுகர்வுப் பொருளாதாரம் மக்களின் சிந்தனை சக்தியை மழுங்கடிப்பதன் மூலமே தனது தேவைகளைப் பெற்றுக் கொள்கின்றது. தேசியம் இனம் சாதி போன்ற பல குறுகிய மாயைக்குள் மக்களை புதைத்து வைத்திருக்க தன்னாலான அனைத்துக் காரியங்களையும் செய்கின்றது.

20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் வரலாற்றுப் பிறழ்வாக இன்று கருதப் படும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மேற்கு சார் முதலாளித்துவத்தை தனிக்காட்டு ராஜாவாக்கியுள்ளது. கம்யூனிசத்தின் நோக்கம் தனிமனிதரைப் பொருளாதார ரீதியில் சமப்படுத்துவது. அது சரியா பிழையா காரிய சாத்தியமா என்பதற்கப்பால் முதலாளித்துவத்தை எதிர்த்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய எதிரியான சோவியத்தை சிதறடித்த முதலாளித்துவத்தின் பார்வை இப்போது மத்தியகிழக்கு மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ளது. சோவியத்தை மீள் எழுச்சியை எந்த விதத்திலும் அனுமதிக்காத கடும் போக்கில் அது காரியம் ஆற்றிக்கொண்டிருக்கின்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் சிதைவையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட நேட்டோவின் பிடிக்குள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வேகமாக உள்ளெடுத்துக் கொண்டிருக்கின்றது.

தஜிகிஸ்தான், கஜகிஸ்தான் போன்ற முன்னைநாள் சோவியத்நாடுகளில் பலமான இராணுவ நிலைகளை அமைத்து கஸ்பியன் கார்டனை அமைத்துள்ளது. இது எதிர்காலத்தில் உச்சம் பெறக்கூடிய இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டியைக் கருத்தில் கொண்டும் ஐரோப்பா நோக்கிய ஆசிய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தக் கூடியதுமான அரணாகவும் நிறுவப்பட்டுள்ளது. தம் நலன்களுக்கெதிராக எழக்கூடிய தடைகளை அகற்றும் நடவடிக்கையில் விரைவு காட்டுவதன் வெளிப்பாடே ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தமும் ஈரான், வடகொ ரியா போன்ற நாடுகளின் மீதான யுத்த முஸ்தீபுகளும் ஆகும். மத்திய கிழக்கின் மீதான யுத்தம் ஆதிக்கப் போட்டி என்பதல்லாமல் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கக் கூடிய எண்ணைத் தேவையைச் சேமிப்பதாகும்.

மத்திய கிழக்கு நாடுகளின் முதிர்ச்சியற்ற சமய அடிப்படைவாத நடவடிக்கைகள் ரொனி பிளயரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் பார்பரியன் மனப்பாங்கு மேற்குசார் நலன்களை நிலைநாட்டவும் இன்னும் ஆழப்படுத்தவும் சந்தர்ப்பங்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றது. சோவியத்தின் வீழ்ச்சி ஒரு வரலாற்றுப் பைறழ்வு என்றால் அமெரிக்கா மீதான தாக்குதல் மாபெரும் வரலாற்றுத் தவறு இதை யார் செய்திருந்தாலும். அமெரிக்கா இப்படியான சந்தர்ப்பத்தை நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது. இன்று பேரினவாதத்தின் எதேச்சசதிகாரம் எந்தக் கேள்வியும் இன்றி முன்னெடுக்கப்படுவது தான் மிகப் பெரிய சோகம்.

இதற்கான அடிப்படையை அமெரிக்கா வெகு சிறப்பாக ஏற்படுத்திக் கொண்டது. அதனை " இன்று உலகில் இரண்டு பிரிவுகள் தான் இருக்கின்றன. ஒன்று பயங்கர வாதத்தை ஆதரிக்கும் நாடுகள். மற்றது பயங்கர வாதத்தை எதிர்க்கும் நாடுகள். நீங்கள் எந்தப் பக்கம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் " என்று மிகத் தெளிவாகவே புஸ்ஸின் வார்த்தைகளில் கூறிவிட்டது. எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பதென்பதை பயங்கர வாதமாக அழகாக பூச்சுப் பூசியுள்ளது. இதனாலேயே உலக நாடுகள் இன்று வாயையே திறக்க முடியாமல் மென்று முழுங்கும் நிலையிலுள்ளன. வாயைத் திறந்தால் சாத்தானின் அச்சில் சேர்த்து விடக் கூடிய பொறி ஒன்று வைக்கப் பட்டுள்ளது. இது இன்று உலகப் போக்கின் அடிப்படையை விளங்க உதவும் என்று எடுத்துக் கொண்டு இந்தியாவின் நிலையைப் பார்ப்போம்.

இது வரை இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்த சோவியத் சார்பு என்பது சோவியத் யூனியனின் உடைவின் பின் திரிசங்கு சொர்க்க நிலையாகப் போய்விட்டது. மேற்கின் பேரினவாதம் இன்று சீனாவைச் சுற்றி வளையம் அமைக்கும் வேளையில் இந்தியாவையும் அதன் பார்வையில் வைத்திருக்கின்றது. இந்தியாவின் அதீத சனத் தொகைப் பெருக்கமும் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் தொலை நோக்கற்ற அரசியல் தலமைகளும் இந்தியாவை எங்கோ கொண்டு போகின்றது. அதீத சனத்தொகைப் பெருக்கமும் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் வளர் ம்உக நாடுகளில் இயல்பானது என்றாலும் தொலை நோக்கற்ற அரசியல் தலமைகள் மிகவும் ஆபத்தானவை.

மேற்கு சார் பேரினவாதத்தின் ஆபத்தை சீனா விளங்கிக் கொண்ட அளவு கூட இந்தியா விளங்கிக் கொள்ளவில்லை அல்லது விளங்கிக் கொண்ட போதும் அதனைத் தடுக்கும் செயல்களில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்காவுடன் நெருங்கிக் கொள்வது என்பது சோவியத்துடன் இருந்த அளவு என்றுமே நடக்கப் போவதில்லை. ஏனெனில் பேரினவாதத்தின் இருப்பிற்கு சீனா இந்தியா என்பன வளர்ச்சியடைவது என்றுமே அச்சுறுத்தலானது.

பலம் வாய்ந்த நாடுகளின் சிதைவே பேரினவாதத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும். முதளாளித்துவத்தின் பார்வையில் ஒரே உறையில் ஒரே கத்திதான் இருக்க முடியும். அணு ஆயுத நாடு என்று மார்தட்டிக் கொள்வதெல்லாம் கவைகுதவாத வேலை. அழிவைத் தவிர வேறு ஒன்றுக்கும் உதவாத பொருள் அது. அணு சக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன் படுத்தும் முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் இல்லை.

அமெரிக்காவுடன் இணைந்து செல்ல எடுக்கும் முயற்சி அமெரிக்காவின் பிடியை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இறுக்கிக் கொள்ள துணை போகுமேயொழிய இந்தியாவிற்கு எந்தவிதத்திலும் நன்மையாகாது. நியாயமாகக் கேட்டுப் பெறக் கூடிய உதவிகளையும் கிடைக்கவிடாது தடுத்துக் கொள்ள அமெரிக்கா பாகிஸ்தானை தடவிக்கொடுத்து வளர்த்து வருகின்றது.

இந்தியாவின் இக்கையறு நிலை கார்ஸியாத் தீவுகளில் இருந்த அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை இலங்கை வரை அழைத்து வந்து விட்டது. இந்நிலைமைக்கு தொலை நோக்கற்ற குறுகிய அரசியல் லாபநோக்குள்ள அரசியல் தலமைகளும் றோ போன்ற அமைப்புகளின் தான் தோன்றித் தனங்களும் முழுக்க முழுக்கக் காரணம். சோவியத்தின் வீழ்ச்சியின் பின் நெருங்கியிருக்கக் கூடிய சீனாவுடன் அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமை மகா தவறாகப் போகப் போகின்றது. பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்ற அளவிலாவது ஒன்று சேர முயற்சித்திருக்கலாம். இன்று சீனாவின் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப் படும் நிலையில் இந்தியா இருக்கின்றது. சீனாவை போன்று தாக்கமான வளர்ச்சியைக் காட்ட வேண்டிய இந்தியா சிறு பூச்சியான பாகிஸ்தானுடன் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. சீனாவிற்குள் மூக்கை நுழைக்க ஒரு தாய்வானை வைத்திருப்பது போல இந்தியாவிற்குள் மூக்கை நுழைக்க ஒரு காஸ்மீரை வைத்திருக்கின்றது முதலாளித்துவப் பேரினவாதம். இந்தியா தன் அயல் நாடுகளுடன் சுமுகமான நட்பைக் கட்டியெழுப்ப முயலாது அடாவடியயக நடந்து கொண்டிருப்பது பெரும் சோகம் . வடக்கே சீனா கிழக்கே பங்களாதேசம் தெற்கே இலங்கை மேற்கே பாகிஸ்தான் என்று இந்தியாவைப் பகைமையுடனும் சந்தேகத்துடனும் பார்க்கும் நாடுகளே பெருகியுள்ளன.

இதற்கும் மேலாக நாட்டிற்குள்ளேயே குத்து வெட்டுகள். உள்நாட்டிலேயே நீதி கிடைக்காது இந்தியா என்ற அமைப்பிலேயே நம்பிக்கை தகர்ந்த மக்கள். இமாச்சலம், நாகாலாந்து, ஆந்திரா , பஞ்சாப் என்று காலத்திற்குக் காலம் புகைந்து தணிந்து கொண்டிருக்கும் அதிருப்தி. சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகளையும் தாண்டி விட்ட நிலமையிலும் வளங்கள் சமாகப் பங்கிடப் பட்டு பொருளாதார முயற்சிகள் முடுக்கிவிடப் படவில்லை. ஐந்தாண்டுத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. பொருளாதார முன்னேற்றம் என்பது தனி மனித வருமானத்தால் தீர்மானிக்கப் படுவது என்பது மறக்கடிக்கப் பட்டுள்ளது. நாட்டின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழுகின்றார்கள். உயர் கல்வியறிவு உள்நாட்டில் பயன்படுத்தும் வளமான சூழல் ஏற்படுத்தப் படவில்லை. சொந்த நாட்டில் பயன்படுத்த முடியாதவாறு தங்கள் அறிவை வெளிநாட்டில் மக்கள் வித்துக்கொண்டிருக்கின்றார்கள். வளர்ந்து வரும் நாடு ஒன்றில் இந்நிலமை காணப் படுவது தொழில்நுட்ப வறட்சியையே ஏற்படுத்தும்.

அதிதீவிர இந்துத்துவா போக்கு அல்லது மேற்கு சார்ந்த இப்போது இருப்பதைப் போன்ற அதி மென்மைப் போக்கு இந்தியாவை நல்ல திசையில் கொண்டு போகப் போவதில்லை.

தீர்க்க தரிசனம் மிக்க தலைமையும் அதி நுட்ப அறிவு சார்ந்த பொருளாதாரம் மற்றும் இணக்கமான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் வரை இந்தியா மேற்கின் பேரினவாதச் சூழ்ச்சியில் சிக்கி அமிழ்ந்து போவதற்கான வாய்ப்புகளே இருக்கின்றது. அறிவு ஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் சொந்த விருப்பு வெறுப்புக்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நாடு என்பதை மட்டும் எண்ணிச் செயற்படும் நேரம் இது.

No comments: