Sunday, January 01, 2006

வாழ்க்கையின் மொழி என்ன ?

வாழ்க்கைக்கு மொழி இருக்கின்றதா ? யாராவது அந்த மொழியைக் கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா ? ஏன் இப்படியொரு கேள்வி எனக்குள் ஏற்பட்டது என்பது கூட இன்னும் ஆச்சரியமாகவே இருந்துகொண்டிருக்கின்றது. வாழ்க்கை என்பது என்ன என்பது கூட விளங்காத புதிராகத் தான் இருக்கின்றது. வாழ்க்கை என்றால் என்ன ?

நான் இதுவரை வாழ்ந்ததா ? இல்லை இனிவருங் காலத்தில் வாழப் போவதா ? இல்லை நான் அல்லாமல் மற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதா?
எது வாழ்க்கை. எவர் வாழ்ந்தது ? அல்லது வாழ்ந்து கொண்டிருப்பது ? அல்லது வாழப்போவது ? எதை வாழ்க்கை என்று சொல்ல முடியும்.

உலகம் பிறந்ததிலிருந்து 'வாழ்ந்து' மறைந்த கோடிக்கணக்கான மனித உயிரகள் செய்தது என்ன ? மனிதர் தவிர்ந்த மற்றும் உயிரினங்கள் செய்து கொண்டிருப்பது என்ன ? இதனை வாழ்க்கை என்று சொல்ல முடியுமா ? அல்லது வாழ்க்கை இல்லை என்று சொல்லிக்கொள்ளக் கூடுமா ?

மனிதர் வாழ்ந்தது , வாழ்வதே வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் வாழ்வின் மொழி என்ன ? வாழ்வின் மொழியை அறிந்திருந்தால் வாழ்க்கையில் இத்தனை துன்ப துயரங்களும் இல்லாமல் மனித இனம் வாழ்ந்து விட்டுப் போகக் கூடுமோ ?

வாழ்க்கைப் பயணம் இன்ன திசையில் நகர்ந்து இந்த இலக்கில் முடிந்து விடும் என்பதறிந்தால் மனித மனத்தின் மாச்சரியங்களும் கொடூர முகங்களும் இல்லாது ஒழிந்து போகக்கூடுமோ ?

எது வாழ்க்கையின் மொழி ? வாழ்க்கையின் மொழி என்பது மனிதாபிமானம் நிறைந்ததாய் இருக்கக் கூடும். மனிதனை மனிதன் நேசிப்பதை சொல்லிக் கொடுப்பதாய் இருக்கக் கூடும். மனிதருடன் இணைந்து மகிழ்ந்து வாழ்வதை ஊக்குவிப்பதாக இருக்கக் கூடும்.

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் வாழ்க்கையின் மொழியைச் சரிவரப் புரிந்தே வாழ்கின்றன மனிதரைத் தவிர.
அவற்றுக்கிடையே போட்டியில்லை , பொறாமையில்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லை , சுரண்டல் இல்லை.

ஆனால் மனிதனிடம் இவை எல்லாம் இருக்கின்றன. வாழ்க்கையின் குறிப்புணராத பேதமை இருக்கின்றது. தான் என்ற கர்வம் இருக்கின்றது. தனது நம்பிக்கையை மற்றவர் மேல் திணிக்கின்ற மதம் இருக்கின்றது. தனக்கு மட்டுமே அனைத்தும் என்கிற பேராசை இருக்கின்றது.

அதானால் வாழ்க்கையைத் தொலைக்கப் போகின்ற ஆபத்தும் இருக்கின்றது. எப்பொழுது நாம் வாழ்க்கையின் மொழியைப் புரிந்து கொள்ளப் போகின்றோம் ?

No comments: