Sunday, January 15, 2006

அடடா .... அடடா ......

இப்போதெல்லாம் யார் கதாநாயன் யார் கோமாளி என்றெல்லாம் வேறு படுத்திப் பார்ப்பதே முடியாத காரியமாய்ப் போய் விட்டது. ஏனென்றால் ஹீரோவாக நினத்தவரெல்லாம் கோமாளியாகவும் கோமாளியாக நினைத்தவரெல்லாம் ஹீரோவாகவும் மாறும் காலமாகப் போய் விட்டது.

ஹீரோவாக நினைத்திருந்த ரஷ்யா உக்ரேனுடன் வாயுச்சண்டை (வாய்ச் சண்டையில்லை) பிடித்து கோமாளியாக வேஷம் கட்டி நிற்கின்றது. சின்னச் சின்ன நாடுகள் எல்லாம் இப்படி கோமாளி வேஷம் போட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை. கண்டு கொண்டாலும் அது அப்படித்தான் என்று விட்டு விடுவார்கள். உதாரணத்திற்கு இலங்கை. விபூஷகர் எல்லாம் அரசியல்வாதி வேஷம் கட்டி மக்களுக்குச் சிரிப்பூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இப்போது பெரிய நாடுகளும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு வேஷம் கட்டிக் கொள்ளத் தொடங்கி விட்டன. உலக மயமாக்கல் கட்டிக்கொண்ட சந்தோஷங்களில் இதுவும் ஒன்று என்றே எண்ணிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அமெரிக்காவும் வேஷம் கட்டத்தொடங்கி விட்டதோ என்று எனக்குத் ( இப்பொழுது தான் உன் கண்ணுக்குத் தெரிந்ததா ? என்று யாராவது திட்டினால் என்னிடம் பதிலில்லை ) தோன்றுகின்றது.

வருகின்ற செவ்வாய்க்கிழமை 24.01.2006 இல் அமெரிக்க புலனாய்வித் துறை அதிகாரிகள் இலங்கைக்கு வரப்போகின்றார்களாம். அவர்கள் வருவது போவது என்பதிலெல்லாம் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர்கள் சொல்லிக் கொண்டு வரும் காரணம் தான் எனக்குச் சிரிப்பை வரவழைக்கின்றது.

" தாங்கள் தேடி அழித்தொழித்து வரும் பயங்கர வாதிகளுடன் இலங்கையில் இயங்கும் குழுக்களுக்கு ஏதேனும் தொடர்பிருக்கின்றதா ? " என்று பார்க்க வருகின்றார்களாம். பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடிய அளவு சின்னப் பிரச்சனையாக இது இருக்கக் கூடுமென்று நான் நினைக்கவில்லை. யார் யார் பயங்கரவாதம் பேசுகின்றார்கள் ? செய்கின்றார்கள் என்று இன்று பத்தாம்பசலி மக்களுக்கும் தெரிந்திருக்கின்றது.

மதராஸ்ஸாக்களிற்கூடாக மந்திரம் சொல்லி அனுப்புகின்ற சவூதி அமெரிக்கரின் கூட்டாளி. ஆண்டுக்காண்டு அரசல் புரசலாக அப்பப்போது வெள்ளையரையும் வேற்றுக் கிரகத்து மனிதர்களையும் போட்டுத் தள்ளும் இந்தோனேசியா இனிய நாடு. நேரடியாகவே பேசக்கூடிய மலேசியா மோதுவதற்கு உதவாத நாடு. பாகிஸ்தான் 'மூச்'.....

கஸ்ரப் பட்டு உழைத்து மூளை தேய்ந்தவர்களுக்கு ஒரு உல்லாசம் கொடுக்க இலங்கைக்கு வருகின்றார்களோ தெரியவில்லை. இலங்கை உல்லாசத்திற்குப் பேர் போன நாடு. அல்லது இந்தியாவுக்கு சில நித்திரை இல்லாத இரவுகளைக் கொடுக்க வருகின்றார்களோ தெரியவில்லை.

சதாம் குசைனின் பெயரில் கிராமம் வைத்து பின்லேடனைத் தொழுது அப்பாவிகளைக் கிழக்கின் கரையில் வெட்டிப் போடுபவர்கள் அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கின்றார்கள். சோஷலிசம் பேசி மக்களைக் குப்பைக்கூடயில் போட்டு மூடுபவர்களும் சிவப்புக் கம்பளத்தால் தங்களை மூடிக்கொண்டிருப்பவர்களும் அரசாங்கத்தில் தான் இருக்கின்றார்கள். அசோகன் அனுப்பிய புத்தம் தம்மம் எல்லாவற்றையும் விட்டு அசோகனின் மனமாற்றத்திற்கு முன்னுள்ள இரத்தம் சத்தம் எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டிருப்பவர்களும் அரசாங்கத்துடன் தான் இருக்கின்றார்கள். பயங்கரவாததைத் தேடி அழிக்கும் அமெரிக்கர்களுக்கு நல்ல வேட்டைதான்.

இது முடியாதென்று இந்தியாவிற்கும் போகின்றார்களாம். ஏன்.. அங்கும் பயங்கரவாதிகளா ? பாகிஸ்தானுக்கும் இவர்கள் போகவேண்டி வரும். பாகிஸ்தானைத் தொடர்ந்து கஜகஸ்தான் மத்திய அரபு நாடுகள் என்று ... நாடுகளுக்கா பஞ்சம். பெரிய ஒரு டூர் ஆகத்தான் புறப்பட்டிருக்கின்றார்கள்.

அட ... போங்க ... நல்ல ஒரு அரசியல் .... டமாஸுங்க......

No comments: