Monday, January 23, 2006

"கோ" என்ற ஒரு சொல்

அடை மழை அடித்துப் பெய்து கொண்டிருக்கின்றது. சள சளவெனத்தரையில் மோதி அறையும் சப்தம் இரைச்சலாய்க் கேட்கின்றது. இடையிடையே ஊடு பரவி ஊதலாய் வீசி அடிக்கும் காற்றில் நீர்த்துளிகள் சிதைந்து தூவாணமாக ஜன்னலில் மோதித் தெறிக்கின்றது. நமநமத்துப் போன தரை போல மனதும் கொளகொளத்துப் போய்க் குமைந்து கொண்டிருக்கின்றது. எதனால் இப்படி நடந்தது என்ற கேள்வி விடை காணா விடலையாக இலக்கின்றி அலைந்து கொண்டிருந்தது.

மூலையில்ப் பதுங்கி விம்மித்தணியும் குழந்தைகளின் கேவல் காதுகளில் கேட்கும் நாராசமாய் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற பிரமை தான் நீடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் தூங்கி வெகு நேரமாயிருக்க வேண்டும். அறை இருண்டிருக்க கதவு இறுகச் சாத்தப்பட்டிருந்தது.

உணர்ச்சிக் கொந்தளிப்பின் வேகம் தணிய உடல் அடித்துப் போட்டது போன்ற சோர்வுடன் அவன் படுத்திருந்தான். தன்னைப் பற்றி எண்ணும் போதே தன்னிலை மறந்த கோபமும் பச்சாதாபமும் ஒன்றுசேர எழுந்தன. தன்னால் இன்று சிதைந்து போன அமைதியும் அழகும் அவனைப் பார்த்து கேலி செய்வது போன்ற பிரமை அவனை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியது. முதலும் முடிவுமாய் இல்லாத தொடரும் இந்நிலை அவன் நிம்மதியை அரித்துத் தின்று கொண்டிருந்தது. உலகமே தனக்கெதிராய் செயற்படுவது போன்ற ஆவேசம் தோன்றியது. மனதின் கொந்தளிப்பு ஒரு நிலையில்ப் படியாமல் மேலும் கீழும் நழுவிக் கொண்டிருந்தது. உலகின் சூழ்ச்சிகளும் சூக்குமங்களும் தனக்கெதிராக சதி செய்வது போன்று தோன்றியது. காரணங்களை அறியும் முன் விளைவு தன் உயிரின் -அவன் நினைத்துக் கொண்டிருப்பது போல் _குழந்தைகளிலும் மனைவியிலும் இரத்தமாய் விடிந்ததே அவனைத் தூங்க விடா உழல்வில் தூக்கிப் போட்டிருந்தது.

ஒரு கணவனாய் தன்னால் செய்திருக்கக் கூடிய நன்மைகளையும் துன்பங்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் சீரழிவில் இருந்து தன்னைக் காக்கக் கூடிய ஏதும் ஒரு பெரும் சக்தி தன்னால்க் காயம் பட்டுச் சிதைந்து போய் வானத்தைப் பார்த்து கையேந்தும் அவளையும் காக்கக் கூடும் - காக்க வேண்டும் என்று அவனுக்குப்பட்டது. சமூகத்தின் நெருக்குவாரங்களில் அடிபட்டுப் போகும் அவனின் ஆதங்கம் வெறியாகி அவளை மட்டும் அடித்துப் போட்டு கருக்கிக் கொண்டிருப்பது இவ்வாறு நீளும் இரவுகளில் மட்டும் அவனால் உணர முடிகின்றது. முடிந்தென்ன....... தொடரும் பகல்களிலும் முடியும் காலங்களிலும் அவளை துவைத்துப் போடும் இரக்கமில்லாத கொடியவனாய் இலகுவாய் மாறிப் போகும் கொடுமைதான் வாய்த்திருக்கின்றது.

இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது இருக்குமாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதி அவளை இரையாய் விழுங்கிக் கொண்டிருப்பதை யாரால் ஞாயப்படுத்த முடியும் அவனைத்தவிர. " கோ" என்று அவளுக்கு அரசனாயும் இறைவனாயும் வாழப் பணித்த சமுதாயம் அவனை நசுக்கிப் போடும் இடர் அத்தனையையும் ஒற்றைத்தலையில் சுமக்கும் பலி பீடமாய் அவளை ஆக்கிப் போட்டிருப்பதை உணர முடியாக் கயமையில் அவன் முழுகிப் போயிருந்தான்.

வேலையிடத்தில் இருந்து திரும்பி வந்தவன் சோபாவில் துவண்டு போய் சரிந்திருந்தான். உடல் வீட்டிற்கு வந்து விட்டிருந்தபோதும் மனம் என்னவோ வேலைத் தலத்திலேயே சுத்திச் சுத்தி நின்றது. காலையிலிருந்தே மனம் என்ன செய்வதென்ற புலனறியாக் குழப்பத்தில் சுழன்று கொண்டிருந்தது. மனம் ஒருப்பட்டு வேலையில் கவனம் செலுத்தா சதுராட்டதில் தடக்கடித்துக் கொண்டிருந்தான். பாரிய இயந்திரத்தின் இரைச்சலின் மேலாக மனதின் அங்கலாய்ப்பு அவனை திசைதிருப்பிக் கொண்டிருந்தது. இறுதி செய்ய வேண்டிய கடனின் தவணை நாளை என்பதே அவன் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருந்தது. எப்படிப் பிரச்சனையைக்கடப்பது என்று கேள்வியின் இழுவல் திசையெல்லாம் ஒதுக்கப் பட்டும் தீர்வறியாக் குழப்பத்தில் மனது துவண்டு கொண்டிருந்தது. இயந்திரமாய் வேலையில் கவிழ்த்து மடித்து வந்த இரும்புத் பாளங்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தான். நெக்கு விட்டு இளகித் தேவைப்பட்ட துளைகளையும் வெட்டுகளையும் போட்டுக்கொண்டு வெளியில் வந்த துண்டங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான் உதவியாளன். சள சள வென்று கதைத்துக் கொண்டே வேலையில் ஈடுபடுபவனின் மெளனம் கண்டு அவனும் எண்ணச் சுழலில் சிக்கி வேலையிலீடுபட வந்தது வில்லங்கம். எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகையில் கண்ணில்ப் பட்ட குறையை அவனிடம் காட்ட மனம் துணுக்குற்றது. உதவியாளனின் கவனக் குறைவென்றாலும் இயந்திர இயக்குனன் என்ற வகையில் அடிக்கடி பரிசீலித்துப் பார்க்கும் கடமையும் பொறுப்பும் அவனதே என்ற நிலமையில் தவறின் முழுத் தார்மீகப் பொறுப்பும் அவனின் மீதே சுமத்தப் பட்டது. மேற்பார்வையாளரின் முன்னால் கூனிக் குறுகி நின்றபோதும் முகாமையாளரின் பார்வைக்கு எடுத்தச் செல்லப் பட்டிருக்கும் பிரச்சனையின் பூதாகரமும் அவனின் மன உளைச்சலை மேலும் தீவிரப் படுத்தியது. அவனை என்றுமே போட்டியாளனாகவே கணித்த சக வேலையாளரின் அடாவடிப் பேச்சுகளும் கேலிகளும் அவனைச் சூடாக்கவே செய்தது. அவனது எந்தப் பேச்சும் செயலும் ஒருவித அத்து மீறலாகவே கணிக்கப் படக் கூடிய சூழல் உணர்ந்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான். அவர்களின் உல்லாசத்திற்கும் கவலையில்லா வாழ்விற்கும் அவர்களின் பொருளாதார செழிப்பு காரணம் என்பதும் மனைவியரின் தேர்ந்தெடுப்பில் செழுமையையும் சேர்த்துக் கொண்ட புத்திசாலித்தனம் என்ற பிதற்றல்களையும் அவன் அறிந்தேயிருந்தான். நெருக்கடிகள் அவனை நெருக்கிக் கொள்ளும் வேளைகளில் தனக்கெதிராக சதிசெய்திருக்கக் கூடியவர்கள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் அனைவரையும் அர்ச்சித்து ஆறுதல் அடைவதை வழக்காக்கிக்கொண்டிருந்தான். இன்றும் தனக்கேற்பட்ட இத் தலை
குனிவிற்கும் அவர்களின் முழுமையான சதியே காரணம் என்று வசை பாடி தன் இயலாமையையும் ஆற்றாமையையும் சமனப் படுத்திக் கொண்டிருந்தான். வீடு வந்தும் போக்க முடியா மனத்தாங்கலுடன் படுத்திருந்த அவனிடம் மனவி கேட்ட ஏதோவொன்று அசாத்திய கோபத்தை ஏற்படுத்த முஷ்டி மடக்கி மூக்கில் நேர்குத்தாக இறக்கினான். ' ஐயோ' என்று அலறி விழுந்தவளை நடிக்கும் நயவஞ்சகக் காரி என்ற எண்ணமும் தனது அத்தனை சிறுமைக்கும் மூல காரணமாய் இவளே இருக்கின்றாள் என்ற ஆற்றாமை வெறியும் ஏற்பட அவன் வெறியில் சிக்கிச் சின்னாபின்னமாக அவள் சிதைந்து போக இடையில் அகப்பட்ட சின்னக் குழந்தைகள் பந்தாக எறியப் பட வீடு இரண களமாகியது.

குடும்பம் என்பதன் அச்சுத் தெரியா அவலத்தின் சிதைவில் சிதைந்து போகும் மூலப் பொருளாக அவள் இருப்பதன் தத்துவ விசாரம் அறியாக் கயமையில் அவன் சொல்லிக் கொண்டான். அவள் என் மனைவி. என் இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமனாய்ப் பயன் பெற வேண்டியவள். சுத்தி வந்த தூகத்தின் சுழற்சியில் அவன் ஆழ்ந்து போகும் போதும் அவன் கோபத்தை தாங்கிக் கொள்ளும் தலை விரி கோல காவிரியின் வடிவம் தாங்கி பொறுமைத் தாயாகி இரத்தமும் கயமையும் நிறைந்த பூமியாய் அவள் உருமாறியபோது அவன் தூங்கிப் போய்விட்டிருந்தான்.

3 comments:

ஜெயச்சந்திரன் said...

சத்தியமா ஏதும் விளங்கலை

Anonymous said...

'கோ'பம் இது இருக்கவேண்டிய அளவுகள் மனுசாளுக்கு மனுசாள் ரொம்ப வித்தியாசமுங்க...

Anonymous said...

கதையில் வரும் நாயகனுக்கு மனம் மாறவகையே இல்லையா.....